இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றது சர்வதேச நாணய நிதியம்!

361 0

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோரிக்கை விடுக்கப்பட்டால், அதனை பரிசீலிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.