சிறுமிக்கு பாலியல் தொல்லை- 103 வயது ஆசிரியருக்கு 15 ஆண்டு சிறை

269 0

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதுடைய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை 2018-ம் ஆண்டு பரசுராமன் சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஆவடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆவடி அனைத்து மகளிர் போலீசார் பரசுராமனை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிபதி சுபத்ரா தேவி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பரசுராமனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.45 ஆயிரம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டார்.