எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது!

193 0

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு, பூநகரியில் நேற்று (16) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.

“நாட்டில் எரிபொருள் எரிவாயு என அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் மக்கள் வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது. பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்றுள்ளது.

“இவ்வாறான இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறன. எங்கள் இடங்களில் கொரோனாக் காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத் தடைகளின் போது முளைத்த இராணுவ சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

“வன வளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களை பறித்து விவசாயம் செய்வதற்கு தடையாக இருக்கிறார்கள். முழுமையாக ஓர் இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களால்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது” என்றார்.