ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் – ரமேஷ்

185 0

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு, காணி விடுவிப்பு மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களை மையப்படுத்தி நேற்றைய தினம் இடம்பெறவிருந்த சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூட்டமைப்புடனான சந்திப்பிற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையிலும், அரசியல் கட்சி என்ற ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என அமைச்சர் கூறினார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி காணி அபகரிப்பு நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, அத்தோடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.