பலாங்கொடை-முல்கமமடு-கஸ்தலாவ பிரதேசத்தில் வீடுகளில் அன்னதானம் பெறச்சென்ற பிக்கு ஒருவர் யானை தாக்கி மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தினமும் காலை நேரத்தில் கிராமத்தில் அன்னதானம் பெறச்செல்லும் குறித்த கிராம விகாரையின் பிக்குவான இவர் நேற்று முன்தினம் வழமைபோல் அன்னதானம் பெறசென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
54 வயதான அந்த பிக்குவின் சடலத்தை 12 மணித்தியாலத்தின் பின்னரே மீட்டதாகவும் இதற்கு முன் குறித்த யானை தாக்கயதில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த காட்டு யானையை கிராமத்தில் இருந்து விரட்ட அவ்விடத்துக்கு அதிகாரிகள் சென்ற போதும் பிரதேச மக்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த கிராமத்தைச் சுற்றி மின்சார வேலி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அதற்கு வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அது தடைப்பட்டதாகவும் இதனால் இக்கிராமத்தில் அடிக்கடி யானைத் தாக்குதலால் மரணங்கள் ஏற்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.