ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

194 0

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் என்ற பாறை எரிவாயு போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழகத்தின் மீது ஒன்றிய அரசு திணித்துவருவது கண்டனத்திற்குரியது. இந்த அபாயகரமான திட்டங்களால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலை நாசமாக்கும்.

இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து தமிழக மக்கள் போராடிவரும் நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குக் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக தெரிவித்துள்ளபோதும், காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு நான்கு மாத கள ஆய்வின் 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடன் சமர்ப்பித்துள்ளது, அதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி படுக்கை பகுதியில் உள்ள நிலம், நீர், காற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அறிவியல் ரீதியிலான ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழகத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் வாயு போன்ற திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அபாயகரமான திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது மட்டுமின்றி இத்திட்டங்களைத் தமிழகத்தில் திணிக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும் ஒன்றிய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.