அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி  இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

288 0

மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்  மற்றும் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராகவும்,அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உபதலைவர் பூபாலராஜாவுக்கு எதிராகவும் நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து தேரரதும் இளைஞர் அணி உபதலைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்தது.

இது தொடர்பிலான வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.