புவனகிரி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி

209 0

எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1,170 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 814 பேர் வாக்களித்தனர். ஆனால் கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 927 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

பின்னர் வாக்குப்பதிவு நடந்த அதே வாக்குச்சாவடி மையத்திலேயே இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் வி.சி.க. வேட்பாளரை தவிர அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

மற்ற வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க.- 4, காங்கிரஸ் -3, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது மறுவாக்குப்பதிவில் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணி புவனகிரி பேரூராட்சியை கைப்பற்றியது.