தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை

212 0

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி அண்மையில் யாழ். மாவட்டத்தினை மையப்படுத்தி கடந்த தினம் மேன்முறையீட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி அடுத்த சில வாரங்களில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், தகவல்களை வழங்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளில் பெரும்பாலானவை பிரதேச செயலகங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராகவும் கணிசமான எண்ணிக்கையிலான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது