கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

190 0

அதுல்கோட்டை அங்கம்பிடிய வீதி மற்றும் நாவல ராஜகிரிய வீதியை இணைத்து ராஜகிரிய நாவல கால்வாயின் குறுக்கே நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் 60 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் நிர்மாணிப் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை நிறைவு செய்யுமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோருக்கு ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை வழங்கினார்.

நேற்று (29) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்தப் பணிப்புரைகளை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முழு மேற்பார்வையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புக் கூட்டுத்தாபனத்தினால் இரு வழிப்பாதையுடன் கூடிய இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

600 மீற்றர் நீளமும் 10.4 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் புதிய பாலத்திற்கு ரூ.1,698.55 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அளவில் இரண்டு நடைபாதைகள் அமைக்கப்படும்.

மேலும் அங்கம்பிட்டியில் இருந்து பாலம் நோக்கி 60 மீற்றர் நீள பிரவேச வீதியும், பாலத்தில் இருந்து பாடசாலைக்கான பாதை வரை 40 மீற்றர் நீள பிரவேச வீதியும் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் சேதமடையாத வகையில் மின்கம்பங்களில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாராளுமன்ற வீதி மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நாவலை நோக்கி இலகுவாக செல்லக்கூடியதாக இருப்பதுடன் ராஜகிரிய வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும்.