தங்கம் வென்ற யுவதியின் வீட்டுக்கு விளையாட்டு துறை அமைச்சின் அதிகாரிகள் விஜயம்

354 0

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் 25.01.2022 அன்று  மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில்   உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின்  வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா ,கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டார  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜங்கயன் இராமநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று யுவதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

கடந்த 18.01.2022 அன்று பாக்கிஸ்தானில் லாகூரில் இடம்பெற்ற  பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான  2 வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்ப்பட்ட50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கத்தினை பெற்றிருந்தார்

இந்நிலையில் குறித்த யுவதியின் வீட்டுக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சின்  வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா ,கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டார  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜங்கயன் இராமநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர்  யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன்  அவரின் எதிர்கால இலக்கினை அடைய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.அத்தோடு அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் யுவதியின் தேவைகளை பூர்த்திசெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.