பரீட்சைக் கடமைகளிலும் அரசியல் தலையீடு

253 0

சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது, இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “திருகோணமலை மாவட்டத்தில் 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமைக்கு மாறாக இம்முறை பல புகார்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

“அதாவது, இந்தப் பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இனச் சமநிலை பின்பற்றப்பட வில்லை. குறிப்பாக, முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டை, கோமரங்கடவெல போன்ற தூரப் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, குச்சவெளி போன்ற பிரதேசத்தவர்களே வழமையாக இப்பகுதி பரீட்சைக் கடமைக்கு நியமிக்கப்பட்டனர். இம்முறை சிரமப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

“வழமையாக வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் வழங்கப்படும் பெயர் பட்டியல்களிலிருந்தே பரீட்சைக் கடமை நியமனங்கள் செய்யப்பட்டன. இவ்வாறு செய்தவதனூடாக சிரேஷ்டத்துவம், தகைமை என்பன கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இம்முறை இந்த நிலை பின்பற்றப்படவில்லை. இதனால் முதலாந்தர அதிபர் ஆசிரியர்கள் உதவி மேற்பார்வையாளர்களாக இம்முறை நியமிக்கப்பட்டுள்ளனர்.

“வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு வெளியே நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலிலிருந்தே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றனது.

“நிமயனக் கடிதங்களில் கூட பெயர், தரம் மற்றும் பாடசாலை என்பன சரியாகக் குறிப்பிடப்படாது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“நேர்மையாக நடக்கவேண்டிய பரீட்சைக் கடமைகளில் இவ்வாறான தலையீடுகளும், இன ரீதியான புறக்கணிப்புகளும் பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.