திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு- வைகோ அறிக்கை

170 0

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பதாக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 26 குடியரசு நாளில், புதுடெல்லியில் நடைபெறும் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணி வகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது.

தமிழ்நாடு முதல்வரும், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டெல்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்க மறுத்துவிட்டது.

பலமுறை இதுகுறித்து எடுத்து விளக்கிய பின்பும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழி தோண்டி புதைக்கும் வகையிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

டெல்லி அரசு அனுமதிக்க மறுத்த ஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது.

குடியரசு நாள் விழா ஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கினைக்கண்டித்து, ஜனவரி 26 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை ம.தி.மு.க. வரவேற்கிறது; பாராட்டுகிறது.

அனைத்துக் கட்சி அலுவலகங்கள் முன்பும், வீடுகளின் முன்பும் தனிநபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்கள் அனைவரையும் ம.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.