தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

326 0

தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதையும், அண்மையில் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் நடைபெற்ற தவறுகளை மறைக்கும் விதமாக இந்த பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகிறது.
அண்மையில் நியாய விலைக் கடைகள் மூலம் அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து பொருட்களும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. அந்த  பொருட்களின் அளவு குறைந்தும் தரமற்றதாகவும் வினியோகிக்கப்பட்டது.
அதேபோல் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. குறிப்பாக மக்களிடத்தே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிய இந்த அரசு அதனை மூடி மறைக்கும் வகையிலும், மக்களை திசை திருப்பும் நோக்கிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாகவே இன்று முன்னாள் அமைச்சர் அன்பழகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அவதூறு பரப்பி மக்களை திசை திருப்பும் தி.மு.க.வின்  செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.