பொங்கல் பரிசு ரூ.500 கோடி ஊழலை மறைக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை- கே.பி.அன்பழகன்

230 0

பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் வழங்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு, அலுவலகம், பள்ளி, ஆஸ்பத்திரி என 57 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது. காலை 6.30 மணி முதல் இரவு 9.45 மணி வரை நடந்தது.

அதிகாரிகளின் சோதனையின் முடிவில் ரூ.2.65 கோடி ரொக்கம், 7 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வங்கி லாக்கர் சாவி மற்றும் ஊழல் தொடர்பான முக்கியமான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 16 பேர் கொண்ட குழுவினர் 17 மணிநேரம் வரை சோதனை நடந்தது.

இதற்கிடையே நேற்று இரவு கே.பி.அன்பழகனின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, வீரமணி, சி.வி.சண்முகம், உதயகுமார், ராமச்சந்திரன், கருப்பண்ணன், பாலகிருஷ்ணரெட்டி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.

கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனையை முடித்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சரியாக இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வீட்டுக்கு முன் திரண்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து, கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அ.தி.மு.க.வினரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது அ.தி.மு.க.வினரும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே கொண்டு வந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிலும் 21 பொருட்கள் வழங்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி உள்ளது. இந்த 500 கோடி ரூபாய் ஊழலை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. அரசு எனது வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது.

இரவு வரை நடந்த சோதனையில் என் வீட்டில் இருந்து பணம், நகை, ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்து மூலமாக தெரிவித்து ஆவணங்களை வழங்கியுள்ளனர். ஆனால் தி.மு.க. அரசுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காக காலை முதல் எனது வீட்டில் கட்டு கட்டாக பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றியதாக பொய்யான தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.