மன்னாரில் விவசாயிகள் போராட்டம்: அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை.

138 0

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையைக் கண்டித்தும் இன்று காலை மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், உயிலங்குளம் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், உயிலங்குளம் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் உயிலங்குளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை சென்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகரசபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அரசின் திட்டமிடாத நடவடிக்கையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோசம் எழுப்பியதோடு அரசாங்கம் உடனடியாக இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன் கூடிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம், ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட வேண்டிய மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அதனை ஜனாதிபதிக்கு உடனடியாக கையளிப்பதாகவும், எமது விவசாயிகள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்பார்கள் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மகஜரின் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கத் துரித நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery