பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட அதி சொகுசு பஸ்கள் இரண்டு, இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு, பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரு பஸ்களும் அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து நேற்றிரவு (6) 10 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டன.
இரு பஸ்களிலும் சுமார் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன், அவ்விடத்துக்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன், சுகாதார தரப்பு அதிகாரிகளால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு, மீண்டும் அதே பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும், பஸ்களின் சாரதி மற்றும் நடத்துநர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.