2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றுக்கு…

161 0

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.

அதில் 1,776 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையினை அரசாங்கம் புனரமைப்புக்காக செலவிடவுள்ளது.

இந்த வருடத்திற்கான செலவீனமான 2,538 பில்லியன் ரூபாவை காட்டிலும் அடுத்த வருடத்தின் செலவீனமானது 33 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவைகளுக்காக 12.6 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை காரியாலயங்கள், நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அடுத்த வருடத்திற்கான ஜனாதிபதியின் செலவீனமானது 2.78 பில்லியன் ரூபாவாகும்.

இதன்படி, கடந்த வருடத்தைக் காட்டிலும், ஜனாதிபதியின் செலவீனம் 6.6 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்திற்கு அதிகளவான நிதி பாதுகாப்பிற்காக ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் பாதுகாப்புத்துறைக்கு 355 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டிருந்த நிலையில், அது அடுத்த வருடத்தில் 18 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுகாதார துறைக்காக 153.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 பில்லியன் ரூபாவினால் அது குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.