மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு

181 0

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த நிலையில் இதுவரையில் நியமனம் கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ரோஹிணி குமாரி விஜேரத்ன எழுப்பிய மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறுகையில்,

“மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக  நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு 8334 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 6746 பேர் சித்தியடைந்துள்ளனர்.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இவர்களில் சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படாதவர்களுக்கு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.