அரசுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்! – சஜித் அறைகூவல்

149 0

இலங்கையின் வளங்களைத் தாரைவார்க்கும் அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

என்று அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

தற்போது விடியும்போது நாட்டில் எங்கோ ஓரிடத்தில் உள்ள தேசிய வளத்தை அரசால் இரகசியமாக விற்பனை செய்த செய்திகளையே கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

அரசு மக்களை மரணத்தை நோக்கிக் கொண்டு சென்று, நாடு முழுவதையும் தாரைவார்க்கும் வேலைத்திட்டத்தை முற்றாகச் செயற்படுத்தி வருகின்றது.

ஒரு புறம் 1970 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட வரிசை யுகம் நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பிள்ளைகளுக்குப் பால்மா இல்லாமல் பெற்றோர்கள் கஷ்டங்களை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடியை மேற்கொண்டு உற்ற நண்பர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அரசு, மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகின்றது. இது அரசுக்கு அந்தளவுக்குச் சிரமமான காரியமல்ல.

கொரோனாத் தொற்று நோய் உக்கிரமடைந்த நேரத்தில் பாணிகளைக் கொடுத்து உயிர்களை ஆபத்தில் தள்ளிய விதம் நாட்டு மக்களுக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது – என்றார்.