10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. செய்யாததை தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.காந்திஜெயந்தியையொட்டி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். குழந்தை திருமணம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.
மக்கள் இதை செய்யக்கூடாது. குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தவறு. அவர்களது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுற்றுப்புற சூழல்களை, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மரங்களை அதிக அளவு நட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியில் இருக்கும்போது எதையும் செய்யாத அ.தி.மு.க. தற்போது தி.மு.க. செய்யும் திட்டங்களை பார்த்து பயப்படுகின்றன. அந்த பயத்தின் வெளிப்பாடு காரணமாக தி.மு.க. எதையும் செய்யவில்லை என்று கூறுகின்றன. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. செய்யாததை தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார்.
தி.மு.க.வின் செயல்பாடுகள் தான் அ.தி.மு.க.வின் விமர்சனத்திற்கு பதிலாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கேபிள் டி.வி.க்கு சொந்தமான ஆதார மையங்களில் பணிபுரிய கூடிய பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு பணி நிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க.வின் அடித்தளம் நன்றாக அமையவில்லை என்று மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.