பாதீட்டுக்கான யோசனையை கிராமிய மட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானம்

140 0

நாட்டில் முதற் தடவையாகப் பாதீட்டுக்கான யோசனையை கிராமிய மட்டத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

பாதீட்டுக்காகப் பிரதேச ரீதியான குழுக்களினூடாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று நேற்று (02) வத்தளை பிரதேச சபையில்  இடம்பெற்றது.

இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 2,505.3 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் புனரமைப்பு பணிகளுக்கே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்தப் பணிகளுக்காக 1,776 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தை விடவும் அடுத்த வருடத்திற்கான செலவினம் 33 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.