நடைபாதை அமைப்பதற்கு 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

241 0

வவுனியாவில் நடைபாதை அமைப்பதற்காக 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முதற்கட்டமாக வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்தியில் இருந்து, பொதுவைத்தியசாலை சுற்றுவட்டம் வரையான வீதிக்கரையில் அதனை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கேள்வி கோரப்பட்டு குத்தகையாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இருபது மில்லியன் ரூபாய் பணம் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி அனைவரது பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.