முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை

204 0

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை (2-ந்தேதி) காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த கூட்டம் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில் 44 கிராமங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. எனவே 376 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

அதில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

கலெக்டர் அனீஷ்சேகர் பாப்பாபட்டி கிராமத்துக்கு சென்று அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை பார்வையிட்டார். அந்த கிராமத்தில் சாலைகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கிராம சபை கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை வந்து சேருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் பாப்பாபட்டி ஊராட்சியில் ஒச்சாண்டம்மன் கோவில் அருகில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பங்கேற்கிறார். கிராம மக்களிடம் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டறிகிறார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கிராம சபை கூட்டம் காந்தி ஜெயந்தி தினமான நாளை (2-ந் தேதி) நடக்கிறது.

இதில் பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி நினைவு இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்குள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

1921-ல் காந்தியடிகள் மதுரைக்கு வந்த போது இந்த இல்லத்தில் தங்கி இருந்தார். இங்கு தான் அவர், அரையாடை மாறும் முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.

இந்த அருங்காட்சியகத்தின் புனரமைப்பு பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.6 கோடி வழங்கப்படும் என சுதந்திர தின உரையின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த பணிகள் தொடர்பாக அருங்காட்சியக நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.

கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பது ஏன்?

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், ஊராட்சிகளின் தலைவர் பதவிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டன.

இதை இந்தப்பகுதிகளைச் சேர்ந்த பிற சமூகத்தினர் ஏற்காததால் 1996 முதல் இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்த முடியவில்லை. தேர்தல் நடந்தாலும், தேர்ந்து எடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இந்த ஊராட்சிகள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றன. அனைத்து அரசுகளும் தேர்தலை நடத்த நெருக்கடி கொடுத்தன.

இந்த சூழ்நிலையில் பெரும் முயற்சிக்கு பிறகு கடந்த 2006-ல் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த உதயசந்திரன் (தற்போது முதல்வரின் தனி செயலாளர்) இந்த ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தி முடித்தார்.

இதையடுத்து 10 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு தற்போது வரை இந்த ஊராட்சிகளில் சுமூகமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.