விண்வெளிக்கு 4 பேரை சுற்றுலா அனுப்பிய ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம்

172 0

பூமியில் இருந்து 575 கிலோ மீட்டர் உயரத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட், பயணம் முடிந்த பிறகு அட்லாண்டிக் கடலில் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது சொந்த நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் நாசாவுடன் ஒப்பந்தம் வைத்து ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்.

இதுவரை விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த நிலையில் முதல் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளிலும், சோதனைகளிலும் ஈடுபட்டது.

இந்த நிலையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தெரிவித்ததைப் போல், இன்று அதிகாலை முதல் முறையாக 4 அமெரிக்கர்கள் விண்வெளி சென்றனர். அவர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளிக்கு ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது.

பிளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 9.30 மணிக்கு பால்கன் என.9 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்வெளி பயணம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பிரே‌ஷன் 4 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் அமெரிக்காவின் ஷிப்ட்-4 மேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரரர் ஜாரிக் ஐசக் மேன் ஏற்பாட்டில் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர்.

அதில் ஷிப்ட்-4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துவமனையின் மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ் ஆகியோருடன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்ஜி, சியான் ப்ராக்ட் ஆகிய 4 பேரும் சென்றுள்ளனர்.

பூமியில் இருந்து 575 கிலோ மீட்டர் உயரத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட் அடுத்த 3 நாட்களுக்கு விண்வெளியை சுற்றி வரும். பயணம் முடிந்த பிறகு, அட்லாண்டிக் கடலில் பால்கன் ராக்கெட் தரை இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதற்கட்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.