கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம் – தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

189 0

பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்த விவகாரத்தையும், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்வது குறித்த விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மழைக்காலக் கூட்டத் தொடரை பா.ஜ.க அரசு வீணடித்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆகஸ்ட் 20 அன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற 19 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 20 முதல் 30-ந் தேதி வரை மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளன.

அதன்படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கட்சிகள் எடுத்த முடிவின்படி வருகிற 20-ந் தேதி மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில் தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக்கொடி ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி பா.ஜ.க. அரசுக்குக் கண்டனத்தை வெளிப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கருப்புக் கொடி ஏற்றி பா.ஜ.க. அரசை ஏன் எதிர்க்கிறோம் என்பதை மக்களிடையே பரப்புரை நிகழ்த்துகிற வகையில், மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்த விவகாரத்தையும், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நாட்டைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மழைக்காலக் கூட்டத் தொடரை பா.ஜ.க அரசு வீணடித்தது.

 

கொரோனாவின் இரண்டாவது அலையைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்கள் வெளியிட்டதைவிட, 5 மடங்கு குறைவான எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளன. நாட்டின் சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்ட மத்திய கலால் வரியைத் திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு மற்றும் சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக மோடி தலைமையில் நடைபெற்று வருகிற ஆட்சியை அகற்றுவதற்கான போராட்டத்தின் விளைவாகவே கருப்புக் கொடி ஏற்றி நமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். இதன்மூலம் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை உணர்ந்து உரிய பாடத்தை, உரிய நேரத்தில் அனைத்து மக்களும் புகட்டுவார்கள் என நம்புகிறோம் .

நாளைய நாள் நல்ல நாளாக மாற்ற, இன்றைக்கு இந்தியாவைக் காக்கும் புனிதப் போரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்துகிற வகையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தமிழகமே அணி திரண்டிருக்கிறது என்கிற உணர்வை வெளிப்படுத்துவோம், வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.