மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளது. இந்த குழுக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.