குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்? பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று முடிவு

258 0

குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கு, கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் பிரல்ஹாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார்.  தனது ராஜினாமாவின் மூலம் குஜராத் மாநிலத்திற்கு புதிய தலைவர் கிடைப்பார், புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை. பா.ஜ.க. தேசியத் தலைமையின் கீழ் கட்சிப் பணியை தொடருவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் பதவி விலகியதால் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை பாஜக தலைமை தொடங்கி உள்ளது. அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய மந்திரிகள், துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், லட்சத்தீவு யூனியன் பிரதேச அதிகாரி பிரபுல் கோடா படேல் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.