ஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று சிறப்புரை ஆற்றவுள்ளார் மஹிந்த

152 0

இத்தாலி, போலோக்னாவில் இன்று நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார்.

ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

அதனை தொடர்ந்து மஹிந்த உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

ஜி-20 சர்வமத மாநாடு செப்டெம்பர் 12 இன்று போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ளது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய மஹிந்த இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.

இவ்விஜயத்தின் போது  மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த இராஜதந்திர சந்திப்பின்போது இத்தாலி ஜனாதிபதி மரியோ ட்ராகி (Mario Draghi), ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி (David Sassoli ) மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி பொருட் பாஹோர் (Borut Pahor) உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.