விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ள நடவடிக்கை

185 0

திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள்  எவ்வித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும்,  இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சுகாதாரத்துறை, முப்படை, பொலிஸார் மற்றும் தொடர்புற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தரிசன பாண்டிகோரள தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக் கூட்டத்தில்  மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,முப்படை, பொலிஸ் அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ”அத்தியவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு  சட்டத்திற்கு முரணாக செயற்படும் வர்த்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

அத்துடன் கொவிட் தொற்று அறிகுறியுடையவர்கள் தகவல்களை மறைக்காது செயற்படல் வேண்டும் எனவும்,  நோய்த்தாக்கம் கூடியபோது வைத்தியசாலையை நாடுவதால் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மாவட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுள் அதிகமானவை அவ்வாறான தன்மையால் ஏற்பட்டதாகவும் எனவே மக்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படல் வேண்டும் எனவும் இதன்போது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜி.எம்.கொஸ்தா தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கொவிட் மரணங்கள் தொடர்பான உடலங்களை தாமதியாது தகனம்/ அடக்கம் செய்தல் உட்பட பல விடயங்களும்  கலந்துரையாடப்பட்டன.