தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதரத்தை இழந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும், இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு மேன்முறையீடு செய்யமுடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக குறித்த மேன்முறையீடை முன் வைக்க முடியும் என அவ்வமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
நிவாரணக் கொடுப்பனவை பெற தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2,000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 2,000 ரூபா கொடுப்பனவை செலுத்தும் நடவடிக்கையின், முன்னேற்றம் குறித்து உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்தவுடன் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடினார்.
இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் செலுத்தி முடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
18 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.