மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் களிமண் குடிசை முழுதாக சேதம்!

238 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலார் பிரிவில் முள்ளிவட்டவான் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் களிமண் குடிசை முழுதாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எங்களை தனியாக வந்த யானை எங்கள் வீட்டை தாக்கியதில் அதிர்ஷ்ட வசமாக தாங்கள் ஓடி தப்பியதாகவும் இதன் போது ஐந்து வயது நிரம்பிய தமது மகனும் தன்னுடன் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெ.திருச்செல்வம் தெரிவித்தார்.

யானையின் தாக்குதலின் போது தமக்கு சிறிது காயங்கள் ஏற்பட்டதுடன் தாம் வசித்து வந்த களிமண்ணால் கட்டப்பட்ட குடிசை வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வாழ்வதற்கு மாற்று இடமில்லாமல் உறவினர்களின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கவனமெடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.