பிணக்குகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை!

172 0

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற தொழில் பிணக்குகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென, தொழில் அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (25) தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே, வடிவேல் சுரேஸ் எம்.பி
மேற்கண்டவாறு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள்  தொடர்பாக
கலந்தாலோசிக்கப்பட்டதுடன், பெருந்தோட்ட நிர்வாகங்களால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற அடாவடி செயற்பாடுகளுக்கு உள்ளாவதாகவும்   சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்பதற்காக,
நான்கு தொழிற்சங்கங்களும் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட
இருக்கின்ற முறைமை தொடர்பாகவும் தொழிலாளர் ஆலோசனை குழுவுக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

தான் முன்வைத்த கருத்துகளை செவிமடுத்த தொழில் அமைச்சர்  நிமால் சிறிபால டி சில்வா,
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும்  தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களின்
உரிமையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் மேற்கொள்ளும்போது, தொழில் அமைச்சு என்ற
ரீதியில் தங்களுடைய  ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருவதாக தெரிவித்த்தாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.