நேர்மையான தேசியவாதியை இழந்திருக்கின்றோம் என மங்களவிற்கு ஸ்ரீகாந்தா இரங்கல்!

158 0

ஓர் நேர்மையான தேசியவாதியை மங்கள சமரவீர அவர்களின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது. அரசியல் நீதி கோரி நிற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்து கொண்டு தேசிய ஒற்றுமைக்காக உறுதியுடன் செயற்பட்ட மங்கள சமரவீர அவர்களின் திடீர் மறைவு துயரமளிக்கின்றது எனதமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் நன்கறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த தனது தந்தையார் மகாநாம சமரவீர அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி 1989ல் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த திரு. மங்கள சமரவீர தனது
நேர்மையான செயற்பாடுகள் ஊடாக தமிழ் – முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டவர் ஆவார்.

இன மத வேறுபாடுகள் இன்றி இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகளுக்காக அவர் உறுதியுடன் எப்போதும் செயற்பட்டார். அவரின் மறைவினால் துயரமடைந்திருக்கும் அனைவருடனும் நாமும் இணைந்து
நிற்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.