யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57000 குடும்பங்கள் தகுதி!

186 0

யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெறுவார்களென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று  யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டைத் தற்காலிகமாக மூடியமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரண்டாயிரம்  கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

நிவாரணம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் குறித்த கணிப்பீடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை குறித்த விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் கொழும்புக்கு அனுப்பவுள்ளோம்.
விரைவில் குறித்த நிவாரண நிதியினைக் கையளிக்கக்கூடியதாக இருக்கும். இதனைப் பெறுவதற்கு 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெற்றிருப்பதாக கருதப்படுகிறார்கள். இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில்  அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றுக்கான அனுமதியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலரும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வருகின்றனர். இது தொடர்பாக நாம் கலந்தாலோசித்து நாளை முடிவொன்றை எடுப்போம்.

கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது யாழ் மாவட்டத்தில் கொரோனா  தொற்று தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுகின்றது.