இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்

174 0

கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் வதிக்கின்ற ஆட்களுக்கு வெளிநாட்டுச் செலாவணியில் சில கொடுப்பனவுகளை மேற்கொள்வதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள்/ தடுக்கப்பட்டுள்ளார்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது என மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளை, அதாவது கடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டைகள் பயன்படுத்துவதன் மீது மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை எதையும் அறிமுகப்படுத்தவில்லை எனப் பொதுமக்களுக்கு அறியத்தருவதுடன் அத்தகைய அட்டைகளை வைத்திருப்போர் தனிப்பட்ட தன்மையிலான நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அத்தகைய அட்டைகளின் தவறான பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கும் அத்தகைய வங்கிகளின் வெளிநாட்டுச் செலாவணி நிலைமைகளுக்கு அமைவாக கொடுக்கல்வாங்கல்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் வெளிநாட்டுச் செலாவணியிலான கொடுக்கல்வாங்கல்களுக்காக இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்துவதன் மீது சில வங்கிகள் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்தி சட்ட ரீதியான கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதில் எவையேனும் இடர்பாடுகளை அவர்கள் எதிர்கொள்வார்களாயின் தொடர்புடைய வங்கிகளை தொடர்புகொள்கின்ற அதேவேளை தற்போது வெளிநாட்டுச் செலாவணியினை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களை மத்திய வங்கி கோருகின்றது.