மட்டக்களப்பில் மதில் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் பலி!

179 0

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில், வீட்டு சுற்று மதில் வீழ்ந்ததில், பேரின்பராஜா பேணுஜன் எனும் 18 வயது இளைஞன், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன், நேற்றிரவு தனது இரவு உணவை முடித்து விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில், வீடு திரும்பாத நிலையில், அவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள சுற்று மதில் உடைந்து கற்களுக்குள் சிக்குண்டு, இன்று (16) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தைப் பார்வையிட்டார்.

தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.