ஆப்கானிஸ்தான் மிகவும் அபாயகரமானதாக, ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது- அதிபர் அஷ்ரப் கனி

208 0

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன.

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதை இந்தியா உள்பட 12 நாடுகள் அங்கீகரிக்க மறுத்துள்ளன.
இந்தியா, ஜெர்மனி, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ராணுவ பலத்தால் ஆப்கானில் அமைக்கப்படும் எந்த ஒரு புதிய அரசையும் ஏற்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. உடனடியாக தலிபான்கள் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானிலும் தோஹாவிலும் நடைபெற்ற இருவேறு ஆலோசனைக் கூட்டங்களில் 12 நாடுகள் தலிபான் அதிகாரத்தை நிராகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரமும் தலிபான்கள் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காபுல் நகரின் எல்லை வரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
தலிபான்கள்
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான்  மிகவும் அபாயகரமானதாகவும், ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், நமது ராணுவத்தையும், பாதுகாப்புப் படையினரையும் ஒருங்கிணைப்பதே முக்கிய நோக்கம். அதனை நோக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் மீது திணிக்கப்பட்ட போரில், அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன்.
நாங்கள் ஒருபோதும் போரை அனுமதிக்கப் போவதில்லை. எனவே, ஆப்கானிஸ்தான் மக்கள் அமைதியும், ஸ்திரத்தன்மையும் கருதும் ஒரு நியாயமான அரசியல் தீர்வை விரும்பும் நமது சர்வதேச நட்பு நாடுகள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசின் மூத்த பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், சர்வதேச பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என தெரிவித்தார்.