நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை!

149 0

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்கள் பொலிஸார் முன்னிலையில் வீதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றிருந்தனர்.

நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுத்தமையால் , வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, பொலிஸாருக்கு முன்பாக வீதியில் உடைத்து, வீதியில் கற்பூரம் கொளுத்தி, நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி, வீதியிலையே விழுந்து வணங்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.