தமிழ்க்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசும் – செல்வம் அடைக்கலநாதன்

213 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டுமாக இருந்தால் நிபந்தனையின் அடிப்படையில், ஒரு நல்லெண்ண முயற்சியாக அமைய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு பின்னடைவை எதிர்நோக்கபோவதில்லை.

ஆனால் கடந்தகால அனுபவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் அரசுக்கு சில நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாக, அரசாங்கம் எங்களுடன் பேசுவதற்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக சில விஷயங்களை முதலிலே மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நாங்கள் விதிப்பது நன்றாக அமையும் என உங்களுடைய கட்சி கருதுகிறது.
அந்த வகையில் இன்று ஐ.நா.தீர்மானங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் நடைபெறுகின்ற நில அபகரிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலை காணப்படுகின்ற நிலையில், காணிகள் சொந்தமான நிலையில் இல்லை.
ஒவ்வொரு திணைக்களத்தினூடாகவும் எமது நிலங்கள் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள நினைக்கும் அரசாங்கம் முதன் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற போது நல்லெண்ண முயற்சியாக சில விடையங்களை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டத்தை அதிகாரங்களுடன் மாகாணசபை முறைமையை இருக்கின்ற அதிகாரங்களுடன் செயற்படுவதற்கான ஆணையை அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும். அரசியல் கைதிகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அபகரித்த நிலங்களை விட்டுக் கொடுக்கும், நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற போது நாங்கள் பேச தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக முக்கிய கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் நிபந்தனையின் அடிப்படையில் கலந்து கொள்கின்ற சூழ்நிலை  ஏற்பட வேண்டும். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு இன்று பலர் விமர்சிக்கிறார்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா.சபையிலே காலக்கெடு எடுத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இவ்வாறு பல்வேறு விடயங்களை குற்றச்சாட்டாக, முன் வைக்கின்ற சூழ்நிலையில், உலக நாடுகள் இன்று உள்ள சூழ்நிலையில் எங்களுக்கு உள்ள பிரச்சினைகளை சாதகமாக கொண்டு வருகின்ற சூழலை கொண்டு வருகின்ற ஒரு நிலையோடு இந்த விடையத்தை நாங்கள் முன்வைக்க விரும்புகிறேன். பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது இந்திய அரசுடன் இணைந்த ஒரு செயல்பாட்டை செய்வதன் ஊடாகத்தான் வெளிப்படைத்தன்மை உருவாகும். அந்த அடிப்படையில் அரசாங்கத்திற்கு நிபந்தனை வைக்கின்றோம்.

முன்வைத்த விடையங்களில் நல்ல சமிக்ஞையை காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாங்கள் சந்திப்பதன் ஊடாக இன்று இருக்கின்ற ஐ.நா சபை தீர்மானத்தின் நிபந்தனைகள் மழுங்கடிக்க கூடிய வகையில் அரசாங்கம் எதிர் கொள்ளுகின்ற உலக நாடுகளின் அழுத்தங்களை நாங்கள் இல்லாமல் செய்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என்பதே எமது பிரதான நோக்கம் தமிழீழ விடுதலை இயக்கம் இந்த பொதுவான விடயத்தை முன்வைத்துள்ளது.

அரசாங்கம் எங்களுடன் பேசுகின்ற ஒரு முயற்சியை முன்னெடுக்குமாக இருந்தால் குறித்த விடையங்களை நாங்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளுக்கு நல்ல சமிக்ஞை கிடைப்பதன் ஊடாகத்தான் பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது எமது கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.