ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி கைது

173 0

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராவோடை, றிழ்வான் பள்ளிவாயல் வீதியில் வீடொன்றில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் 38 வயதுடைய வியாபாரி ஒருவர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

இவரிடமிருந்து 12 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் விற்பனை செய்த பணம் 6,800 ரூபா மற்றும் போதைப்பொருள் நிறுவை தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் கொழும்பிலிருந்து போதைப்பொருளை விநியோகம் செய்யும் வாகனம் தொடர்பிலும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு சில தினங்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர தேடுதல் நடவடிக்கை தடைப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தமது பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.