வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழுவினர் வீட்டில் இருந்த தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்றுமுந்தினம் (09.08) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வவுனியா, தோணிக்கல், பொதுக்கிணறு வீதிக்கு அருகாமையில் உள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த கதிரை, மேசைகள் உள்ளிட்ட வீட்டு தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், கதவினையும் உடைக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில், வெளியில் சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்த போது குறித்த இளைஞர் குழு வீட்டில் நின்றதுடன், வீட்டு உரிமையாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.