தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு, எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை இணைய வழியாக நடைபெறவுள்ளதாக, ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் தெரிவித்தார்.
இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வரங்கில், உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
“இஸ்லாமிய மற்றும் அரபுக் கற்கைகள் ஊடாக நம்பிக்கைசார்ந்த சமூக ஒத்திசைவை ஊக்குவித்தல்”எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலேசிய கெபங்ஸான் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி துணைப் பேராசிரியர் கலாநிதி அஹ்மத் ஸுனாவரி லோங் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்வாய்வரங்கில் 86 ஆய்வுக் கட்டுரைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவுள்ளதாக செயலாளர் கலாநிதி எஸ்.றிபா மஹ்ரூப் தெரிவித்தார்.