பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு

141 0

கிழக்கு மாகாணத் திட்டமிடல் பணிப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளருமாகிய இரா.நெடுஞ்செழியன், பதவியுயர்வின் அடிப்படையில், நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக, கொழும்பில் இன்று (02) தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் 2021.05.11ஆம் திகதிய தீர்மானத்துக்கமைய, அரச பொது நிர்வாக அமைச்சால்இவர் பதவி  உயர்த்தப்பட்டுள்ளார்.

1994.01.17இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்டு வாழைச்சேனை, செங்கலடி பிரதேச செயலக பிரிவுகளில் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு  மாவட்ட சமுர்த்தி ஆணையாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராகவும்  கடமையாற்றி, கடந்த 3 வருடங்களாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளராக ஆளுநரால் நியமிக்கப்பட்ட பின், சிறந்த செயற்திறனுக்கான விருதை கிழக்கு மாகாண  வீடமைப்பு அதிகார சபை 2020.02.28 அன்று ஜனாதிபதியிடம் பாராளுமன்ற  கட்டடத் தொகுதியில் வைத்து இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளியல் சிறப்புக் கலைப்பட்டதாரியான இவர், யாழ் பல்கலைக்கழகத்தில் 3 வருடங்கள் உதவி விரிவுரையாளராகவும் (பொருளியல்), கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட பணிப்பாளர்  சபை உறுப்பினராகவும், இசை, நடனக் கல்லூரியில் கணக்காய்வுக்குழு தலைவராகவும்  கடமையாற்றியுள்ளார்.

இவர் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கொரியா, தாய்லாந்து, மலேசியா,  பிலிப்பைன்ஸ், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிக்கு விஜயம் செய்துள்ளமை முக்கியமானதாகும்.

இவர், தனது முதுமாணிப்பட்டப் பின்படிப்பை(பொருளியல்) காமராஜ பல்கலைக்கழகத்திலும்,  பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளதுடன், 2017இல் இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தரத்தைப் பெற்றுக் கொண்டு, இலங்கைத் திட்டமிடல் சேவையில் 27 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ளார்.