இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரவல் அகழ்வு நிறுத்தப்பட்டது!

279 0

திருகோணமலை  இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை எதிர்வரும் திங்கட்கிழமைவரை உடன் அமுலாகும் வகையில்  தற்காலிகமாக நிறுத்துமாறு   மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வு காரணமாக சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டதனை அடுத்து உடன் களவிஜயமொன்றை இன்று மேற்கொண்டு பார்வையிட்டபோதே குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

உடனடியாக இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை பரிசீலிக்க குழுவொன்றை அமைத்து எதிர்வரும் திங்கட்கிழமை அது தொடர்பான முடிவை உரிய தரப்பினருக்கு வழங்குவதாகவும் அதுவரை கிரவல் அகழ்வை நிறுத்துமாறும் முடிவுகளின் அடிப்படையில் உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இக்களவிஜயத்தில் அரசாங்க அதிபருடன் மாவட்ட காணி பயன்பாட்டு பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.கிரிசாந்தி, ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிரவல் அனுமதிபத்திரதாரர்களும் கலந்து கொண்டனர்.