அத்தியாவசிய சேவைகள் மற்றும் மனிதாபிமான நிலையை கருத்திற் கொண்டு கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை தனித்தனியாக ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வாகனத்தை பல சோதனைச் சாவடிகளில் நிறுத்த வேண்டிய சூழ்நிலையை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நீர்கொழும்பு வீதி, கண்டி வீதி, கொலன்னாவையில் இருந்து தெமட்டகொடை நோக்கிய வீதி, பத்தரமுல்லையில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிய வீதி, ஹைலெவல் பாதையின் பிலியந்தலை நோக்கிய வீதி, காலி வீதி ஆகியவற்றில் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பச்சை நிறத்திலான ஸ்டிக்கர் சுகாதார துறையை சார்ந்தவர்களின் வாகனங்களுக்கு ஒட்டப்படுவதுடன், முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் வாகனங்களுக்கு இலகு நீல நிற ஸ்டிகரும் ஒட்டப்படும்.
ஏனையோருக்கான ஸ்டிக்கர் வழங்களின் போது அத்தியாவசிய சேவைக்கான அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தல் கடிதம் என்பவை பரிசீலிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.