சாவகச்சேரியில் சீன மொழி ஆக்கிரமிப்பு

231 0

சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான சீனா மாநில கட்டுமான பொறியியல் கழகம் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலகப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. .

காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டுப் போராடியவர்கள், இன்று சீன மொழி இலங்கையில் எங்கும் பயன்படுத்தப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

சீனத் தூதர், சட்ட மா அதிபர் மாளிகையில் வைத்த கல்வெட்டில் சீன மொழி இருந்ததற்கு தாங்கள் பரிசாக வழங்கிய இடம், அதனால் சீன மொழியைப் பயன்படுத்தினோம் என்று சால்ஜாப்பு கூறியிருந்தார். வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி பிரதான மொழி என்று இருக்கும் பட்சத்தில், தமிழும் இல்லை சிங்களமும் இல்லாது தனியே சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

15ஆம் நூற்றாண்டில் சீனா இலங்கையை ஆக்கிரமித்து சிங்கள மன்னனைச் சிறைப் பிடித்து சீனாவுக்குக் கொண்டு சென்ற நிலை 21ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா என்று புத்தி ஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.