யாழ் மாவட்டத்துக்கு நாளை முதல் 5000 ரூபா!

217 0

இடர்கால நிதியுதவியான 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடர் காலத்தில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு நாளையிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்திலும் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பெற்று வருகின்ற சுமார் 75,000 குடும்பங்களுக்கும் வருமானம் குறைந்த 38,000 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 152,000 குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
எனினும் தற்போது பயணத்தடை அமுலில் உள்ளதன் காரணமாக அந்தந்தப் பகுதி அரச உத்தியோகத்தர்களினால் வீடுகளுக்குச் சென்று அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.