உப்பு பற்றாக்குறை இல்லை; போதியளவு உப்பு கையிருப்பில் உள்ளது

264 0

நாட்டில் உப்பு பற்றாக்குறை இல்லை மற்றும் உப்பு விலை அதிகரிக்கப்படாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகக் கடலில் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பல் தீப்பிடித்து அதிகளவு இரசாயனங்களை கடல் நீரில் வெளியேற்றிய பின் உப்பின் தரம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் தற்போது மிகையான அளவில் உப்பு உள்ளது என்றும் சதொச விற்பனை நிலையங்களில் உப்பை குறைந்த விலையில் விற்க வர்த்தக அமைச்சு வசதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் மொத்த விற்பனை சந்தைகளில் குறைந்தது ஒரு மாதத்துக்கு தேவையான அளவில் மிகை உப்பு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.