புர்கா என்பது அரேபியக் கலாசாரம். முஸ்லிம் சமூகமே புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் – அலி சப்ரி

397 0

புர்கா அணிவது அரேபியக் கலாசாரமெனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்கா அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது, அரசாங்கத்துக்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை இருந்தது. எனினும் அனைவரதுக் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையாகவே இதன்போது அரசாங்கம் செயற்பட்டது என்றார்.

மேலும் இச்சட்டமூல வாக்கெடுப்பின்போது தனது வாக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வாக்கும் கணக்கில் எடுக்கப்படாது தவற விடப்பட்டுள்ளது என்றார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

புர்காவை நான், எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருடங்களாகவே கூறிவருகிறேன். புர்காவுக்கு தடை விதிப்பதற்கு அப்பால் புர்கா அணியக் கூடாது. தனது மதத்தை மற்​றொருவருக்குக் கொண்டு செல்வது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. எனவே, இதற்கு ஏனையோருடன் முதலில் கலந்துரையாட வேண்டும். இதனை விடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றது எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

புர்கா என்பது அரேபியக் கலாசாரம். இதனை சமூகம் என்றவகையில் முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்காவ அணிவதை நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.